குடிநீர் வாரிய இணையதள சேவை மீண்டும் துவங்கியது

சென்னை: புதிய மின்சார கேபிள் மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்ததையடுத்து, குடிநீர் வாரிய இணையதள சேவைகள் நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. சென்னைக் குடிநீர் வாரியம் சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்தில் புதுப்பித்தல் பணி நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து தரவு மையத்தில் (டேட்டா சென்டர்) புதிய மின்சார கேபிள் மாற்றி அமைக்கும் பணி கடந்த 28ம்தேதி சனிக்கிழமை காலை 6 மணி அளவில் தொடங்கியது. இதனால் இணையதள வழியாக பெறப்படும் சேவைகளாகிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துதல், கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் பெறப்படும் குடிநீர், புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு விண்ணப்பித்தல், பொதுமக்கள் குறை தீர்க்கும் மையம் மற்றும் எம்.ஆர்.சி நகரில் தற்போது இயங்கும் தலைமை அலுவலக இணையதள இணைப்பு ஆகிய அனைத்து சேவைகளும் செயல்படவில்லை.

மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் புதிய மின்சார கேபிள் மாற்றியமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு 30ம்தேதி காலை 10 மணி முதல் வழக்கம் போல் இணையதள சேவைகள் அனைத்தும் செயல்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்திருந்திருந்தது. இந்த நிலையில் சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்தில் கேபிள் மாற்றி அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இணையம் வழியாக செயல்படும் அனைத்து சேவைகளும் நேற்று முதல் வழக்கம் போல செயல்பட தொடங்கியது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: