ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள 50 சதவீத இலக்கை விட தமிழ்நாட்டில் 75% காப்பீடு செய்து சாதனை

சென்னை: 2022-23ம் ஆண்டில், மொத்த சாகுபடி பரப்பில் காப்பீடு செய்வதற்காக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள 50% இலக்கைவிட, தமிழ்நாட்டில் 72% அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சாதனையாகும். விவசாயிகளின் ஒருமித்த நலனுக்காக முதலமைச்சர் வேளாண்மைத் துறையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றினார். மேலும் விவசாயிகளின் நலனுக்காக தனிநிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி, 2021-22 ம் ஆண்டில் ரூ.34,220 கோடியும் மற்றும் 2022-23ம் ஆண்டிற்கு ரூ.33,007 கோடிக்கும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, 6 ஆண்டுகளுக்குப்பின் 2021-22ம் ஆண்டு 120 லட்சம் மெட்ரிக் டன் அரிசி, பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.  இது முந்தைய 2020-21ம் ஆண்டை விட 16 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாகும். நடப்பாண்டில், ரூ.61.13 கோடி நிதி ஒதுக்கீட்டில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமானது செயல்படுத்தப்பட்டது. குறுவை பருவத்தில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.36 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்று சாதனையாகும்.

 மேலும், 2022 நவம்பர் மாதம் பெய்த கனமழையால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 80,357 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர் பாதிப்படைந்தது. திட்ட விதிமுறைகளின்படி 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்ட 87 வருவாய் கிராமங்கள் விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் அறிவிக்கப்படும். இவர்களுக்கு நடப்பு ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. 2022-23ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசால் ரூ.2,339 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக இதுவரை ரூ.661 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

துவரை மண்டலம்

சிறப்பு மண்டலங்களாக சிறுதானிய மண்டலம், பயிறு வகை பயிர்கள் மண்டலம், துவரை மண்டலம் என அறிவித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பதப்படுத்துதல் வரை தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல் போன்றவற்றிற்காக ரூ.7 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

செம்மரக் கன்று

விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் வருமானத்தை அளிக்கக்கூடிய செம்மரம், சந்தனம், மகோகனி, தேக்கு போன்ற மதிப்புமிக்க மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற திட்டம் ரூ.11.55 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு மண் புழு உரம், அமிர்தக் கரைசல் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள 100 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

* 2021-22ம் ஆண்டு தைப்பட்ட பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ரூ.276.85 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இப்பருவத்திற்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* 2022-23 ம் ஆண்டில், இதுவரை 34.74 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு, சுமார் 15.77 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். மொத்த சாகுபடி பரப்பில் காப்பீடு செய்வதற்காக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள 50 % இலக்கிற்கு தமிழகத்தில் 72% காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

* பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்: 2021-22ம் ஆண்டில் மொத்தமாக 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு, 26.06 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். குறுவை மற்றும் சம்பா பருவங்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.498.61 கோடி 4,68,288 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.                

* விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க மாநில அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக சம்பா, தாயடி, பிசானப் பருவ நெற்பயிரில் காப்பீடு செய்ய நீட்டிக்கப்பட்ட காலத்தில் 38,760 விவசாயிகளால் 71,368 ஏக்கர் கூடுதலாக காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: