வங்கி பெண் ஊழியர் கடத்திக்கொலை: கைதான காதலன் சிறையில் அடைப்பு

சூளகிரி: தனியார் வங்கி பெண் ஊழியரான காதலியை, கடத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த நெரிகம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி (55), நாதஸ்வர வித்வான். இவரது மனைவி நீலம்மா. இவர்களுக்கு லாவண்யா (26), பிரியங்கா (22) என்ற மகள்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான பிரியங்கா ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் காலை பணிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரியங்கா மாயமானார். மாலையாகியும் வீடு திரும்பாததால், தாய் நீலம்மா அவரை தேடி வந்தார். இந்நிலையில், வெங்கடசாமி ஆந்திராவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் இருந்தபோது, அவரை போனில் தொடர்பு கொண்ட நபர், உங்கள் மகளை கடத்தி வைத்துள்ளேன். ₹10 லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறேன் என கூறியுள்ளார். அதேபோல், நீலம்மாவையும் அந்த நபர் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நீலம்மா பேரிகை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

வெங்கடசாமிக்கு வந்த ெசல்போன் நம்பரை வைத்து விசாரித்ததில், பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபர் முதுகுறுக்கியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (25) என்பது தெரியவந்தது. டிரைவரான அவர் பிரியங்காவை 2 ஆண்டாக காதலித்து வந்த நிலையில், அவரை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரது செல்போன் சிக்னலை வைத்து விசாரித்ததில், அவர் கர்நாடக மாநிலத்திற்கு தப்பிச் செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கர்நாடக போலீசார் உதவியுடன் நள்ளிரவு கோலார் பகுதியில் காந்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை பேரிகை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது காந்த், அவரை கொலை செய்து கும்பளம் அருகேயுள்ள ஆற்றுப் பாறையில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கு சென்று பிரியங்காவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிரியங்காவை அவர் அணிந்திருந்த ஐ.டி. கார்டின் டேக்கால் கழுத்தை நெரித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின் காந்த்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related Stories: