10ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: 2 குழந்தைகளின் தந்தை கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாரதி நகர் காட்டன் பஜார் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(28). சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜ் தான் பணிபுரியும் நிறுவனத்தில் ராணிப்பேட்டை அருகே ஒரு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் பணியாற்றி உள்ளார். அப்போது, சுந்தர்ராஜ் மற்றும் சிறுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டதாம். சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த 13ம்தேதி சுந்தர்ராஜ் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமி காணவில்லை என்று அவரது பெற்றோர் ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் செல்போன் எண் பதிவுகள் மூலம் சிறுமியையும், சுந்தர்ராஜையும் கொடைக்கானலில் கண்டுபிடித்து நேற்று அழைத்து வந்தனர். இதுதொடர்பாக, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்து வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: