பாலியல், வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்க செங்குன்றத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

அம்பத்தூர்: பாலியல், வரதட்சணை உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க செங்குன்றம் பகுதியில் மேலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நிர்வாகம் மற்றும் பொது மக்களின் வசதிக்காகவும் சென்னை பெருநகர காவல் ஆணையரகம்  மூன்றாக பிரிக்கப்பட்டு சென்னை, ஆவடி, தாம்பரம் என மூன்று ஆணையர்களின் கீழ் இயங்கி வருகிறது. ஆவடி கமிஷனரகத்தின் கீழ் ஆவடி காவல் மாவட்டம் மற்றும்  செங்குன்றம் காவல் மாவட்டம் என பிரிக்கப்பட்டு 2 துணை கமிஷனர்கள் தலைமையில் நிர்வாகம் செய்யபட்டு வருகிறது.

ஏற்கனவே 3 காவல் நிலையங்களுக்கு ஒரு உதவி கமிஷனர் மேற்பார்வையில் ஒரு அனைத்து மகளிர் காவல்  நிலையம் இருந்தது. தற்போது செங்குன்றம் காவல் மாவட்டத்தின் கீழ் செங்குன்றம், மீஞ்சூர், சோழவரம், காட்டூர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர், மாதவரம் பால்பண்ணை, மணலி, மணலி நியூ டவுன், எண்ணூர் மற்றும் சாத்தங்காடு என 12 காவல்  நிலையங்கள் உள்ளன. இதில் எண்ணூர் மற்றும் அம்பத்தூரில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. செங்குன்றம், மீஞ்சூர், சோழவரம், காட்டூர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள் வரும் சிறுமிகள், பெண்கள் பிரச்னையை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

இதேபோல், மாதவரம் பால் பண்ணை, மணலி,  மணலி நியூ டவுன், எண்ணூர் மற்றும் சாத்தங்காடு  ஆகிய காவல் நிலைய எல்லையில் வரும் பெண்கள் பிரச்னைகளை எண்ணூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர். அந்த வகையில், மீஞ்சூர், சோழவரம் காட்டூர் பகுதியில் இருந்து புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு நேரடி போக்குவரத்து இல்லாததால் 2 மணி நேரம் பயணத்திற்கு பின் அம்பத்தூர் காவல் நிலையம் வந்தடையும் கட்டாயத்தில் உள்ளனர். சிலநேரங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் இல்லாததால் மறுநாள் செல்வதிலும் அடுத்தடுத்த விசாரணைக்கு செல்வதிலும்  பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பயண தூரத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலானவர்கள் புகார் கொடுக்க செல்வதில்லை. மேலும் தொடர்ந்து போலீசாரின் விசாரணைக்கு அடிக்கடி வரவழைப்பதால் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது. எனவே, செங்குன்றம் பகுதியில் மேலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். தற்போது பாலியல், வரதட்சணை, பெண்கள் குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே ஒவ்வொரு காவல்  நிலையத்திலும் சட்டம் -ஒழுங்கு, குற்றப்பிரிவு இருப்பதுபோல் அனைத்து மகளிர் காவல்  நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: