தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை என்.என்.நகர் 6வது தெருவை சேர்ந்தவர் லூகாஸ். இவருடைய மனைவி வேளாங்கண்ணி. இவர்களுக்கு டென்னி ராஜ் (3), என்ற மகன் உள்ளார். லூகாசின் தந்தை அமுல்ராஜ் (60). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மருமகள் வேளாங்கண்ணிக்கும், அமுல்ராஜ்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த அமுல்ராஜ், பேரக்குழந்தை டென்னி ராஜை தூக்கிகொண்டு மொட்டை மாடிக்கு சென்று, அங்கிருந்து பேர குழந்தையுடன் கீழே குதித்துள்ளார்.
இதில், அமுல்ராஜ் படுகாயமடைந்தார். குழந்தைக்கு சிறிய காயம் ஏற்பட்டது. உடனடியாக 2 பேரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, அமுல்ராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.