கொல்கத்தா: ராணுவத்தின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஆதாரம் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என்று லெப்டினன்ட் ஜெனரல் ஆர்பி கலிதா தெரிவித்தார். 2016ம் ஆண்டில் பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததற்கான ஆதாரம் எங்கே என்று அரசிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் நிலையில் கிழக்கு படைப்பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்பி கலிதா கொல்கத்தாவில் கூறியதாவது: ராணுவம் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளும்போது எந்த ஆதாரத்தையும் வைத்துக்கொள்வதில்லை. நாடு இந்தியப் படைகளை நம்புகிறது. இது ஒரு அரசியல் கேள்வி. எனவே இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இந்திய ஆயுதப்படைகளை தேசம் நம்புகிறது என்று நான் நினைக்கிறேன். சீன படைகளின் எல்லை தாண்டிய நடவடிக்கைகளை ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எந்த சவாலையும் எதிர்கொள்ள நமது ராணுவம் தயாராக உள்ளது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான எல்லை தெளிவாக வரையறுக்கப்படாததால் தான் இந்த பிரச்னை உருவாகிறது. உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இது சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.