ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உள்பட்ட குமாரபுரம் பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு சொந்தமான உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், கோயிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. இந்த சுவர் அதையொட்டிய தெருவை ஆக்ரமித்து கட்டியுள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் வருவாய்த்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில், அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கோயில் சுற்றுச்சுவரை ஆய்வு செய்தனர்.
அப்போது தெருவை ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதனால் அந்த சுற்றுச்சுவரை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை கோயிலின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் இடிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் குவிய தொடங்கினர்.