புவனகிரி: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி கன்னித்திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் இந்த கன்னித்திருவிழா முழு அளவில் நடைபெறவில்லை. இந்த நிலையில் சி.முட்லூர் கிராமத்தில் கன்னித்திருவிழா நேற்று உற்சாகமாக களை கட்டியது. விவசாயம் செழித்து மக்கள் செழிப்புடன் இருக்க வேண்டும். கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்பதால் கன்னிகளை தெய்வமாக வழிபடும் இந்த திருவிழா பிரசித்தி பெற்றது.
காணும் பொங்கல் தினத்தன்று கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருமுனைகளிலும் 7 செங்கல் வைத்து அவற்றை கன்னியாக நினைத்து கிராம மக்கள் தினமும் வழிபடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் 9வது நாள் திருவிழா நேற்று முன்தினம் இரவு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது கன்னி சிலைகளை கொண்டு வந்து ஒவ்வொரு தெரு முனையிலும் ஒரு ஆண் கன்னி சிலையும், ஒரு பெண் கன்னி சிலையும் வைக்கப்பட்டு அதற்கு பூஜைகள் செய்யப்பட்டு படையல் நடந்தது.