சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடலாம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை

சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடலாம் என அரசுக்கு ஐகோர்ட் யோசனை அளித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விஷயத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை அப்புறப்படுத்த சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை எனவும் அப்புறப்படுத்த அரசு சாரா அமைப்புகள் முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.

பல இடங்களில் இயந்திரங்களை கொண்டு செல்ல முடியவில்லை என கூறிய வழக்கறிஞர், பருவமழை காரணமாகவும் இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார். எனவே, வழக்கை தள்ளிவைக்க வேண்டும் எனவும் முன்னேற்றம் காட்டப்படும் எனவும் அரசுத்தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 14-க்கு ஒத்துவைத்தது. மேலும் சீமைக்கருவேல மரங்கள் நோய் போல பரவுவதாகவும், அதன் தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், குறிப்பிட்ட தேதியில் அத்தனை சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என பஞ்சாயத்துக்களுக்கு உத்தரவிடலாம் என  யோசனை கூறினர்.

Related Stories: