இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்; மகாபலிபுரம் கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

அண்ணாநகர்: சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (35, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த 22ம் தேதி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது 13 வயது மகள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென எனது மகளை காணவில்லை. மகளை கண்டுபிடித்து தருமாறு குறிப்பிட்டு இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி வைத்திருந்த செல்போனை கண்காணித்தபோது, மகாபலிபுரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகாபலிபுரத்துக்கு சென்று, அங்குள்ள விடுதிகளில் சோதனை நடத்தினர்.

ஒரு விடுதியில் சிறுமி இருப்பதை கண்டுபிடித்தனர். போலீசாரை பார்த்ததும் சிறுமியை கடத்தி வந்த  வாலிபர் தப்பிஓட முயன்றார். போலீசார் விரட்டி சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை சூளைமேடு காவல்நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் (24) என்பது தெரியவந்தது. மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒருவருடமாக சிறுமிக்கும், துளசிதரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறி கடந்த 22ம்தேதி மகாபலிபுரம் அழைத்து வந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

சிறுமி வழக்கு என்பதால் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரிடம் வழக்கை ஒப்படைத்தனர். இதையடுத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து துளசிதரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: