×

தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம்: பயனாளர்களுக்கு முதலீட்டு ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் 5 புத்தொழில் நிறுவனங்களில் 7.50 கோடி ரூபாய் பங்கு முதலீடு செய்வதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைவதற்காக தமிழ்நாடு பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம் என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில் முனைவோர்களால் தொடங்கி, நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கப்படும். இந்நிதியத்திற்கு முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது  தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
 
இத்திட்டத்தில் பயன்பெற கடந்த மே 2022-லிருந்து தொழில்முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இதுவரை 330 நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்களில் இருந்து, தொழில்முனைவு  வழிகாட்டுநர்கள், அரசு அலுவலர்கள், முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய தகுதியான நடுவர் குழு அமைக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியான 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ7.50 கோடி பங்கு முதலீடு செய்வதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இப்புத்தொழில் நிறுவனங்களில் அரசே முதலீடு செய்வதன் வாயிலாக இந்நிறுவனங்களுக்கு புதிய  சந்தை வாய்ப்புகள் பெருகும்.

பயனடைந்த நிறுவனங்களின் விபரங்கள்:

*பேக் என் பேக்(Pack N Back) நிறுவனம்

தொழிற்சாலைகளுக்கு  தேவையான பொருட்களை இடம் மாற்றுவதற்கு ஏற்றவாறு   பேக்கேஜிங் செய்யும் சேவையினை வழங்கி வருகின்ற பேக் என் பேக் நிறுவனத்திற்கு  2 கோடி ரூபாய் பங்கு முதலீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்பட்ட சேவையினை வழங்க இந்த நிதியினை பயன்படுத்த உள்ளது.

*யூனிபோஸ்(Unibose)  நிறுவனம்:

கழிவுகள் அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க உதவும் வகையில் கழிவு மேலாண்மைக்கான ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தினை வடிவமைத்துள்ள யூனிபோஸ் நிறுவனத்திற்கு  சந்தைக்கு தேவையான வகையில் ரோபோடிக்ஸ் (Robotics) இயந்திரத்தினை தயாரித்து விற்பனையில் ஈடுபடுவதற்காக 2.50 கோடி ரூபாய் பங்கு முதலீடாக வழங்கப்பட்டுள்ளது.

* டவ் மேன் (Tow Man)  நிறுவனம்

சாலைகளில் திடீரென பழுதடைந்து நின்றுவிட்ட வாகனங்களை விரைவாக பழுது நீக்கவும், அந்த வாகனங்களில் பயணம் செய்தவர்களை உரிய இடத்தில்  சேர்க்கவும் உதவும் தொழில்நுட்ப சேவையினை நாடெங்கும் வழங்கும் திட்டத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் டவ் மேன் நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியினை பயன்படுத்தி பல பெரிய நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கும் அளவிற்கு நிறுவனத்தினை விரிவுபடுத்த இருக்கின்றது.

* எக்கோ சாப்ட் சொல்யூசன்ஸ் (Eco Soft Solutions) நிறுவனம்:

வாகன தொழில் துறையில் பல்வேறு நிறுவனங்களுக்கிடையிலான பரிவர்த்தனைகளை இலகுவாக்க உதவும் மென்பொருள் செயலியினை வடிவமைத்து பல பெரிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ள எக்கோ சாப்ட் சொல்யூசன்ஸ்  நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் பங்கு முதலீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியினை பயன்படுத்தி இந்நிறுவனம் இத்துறைக்கு தேவையான நிதித் தொழில்நுட்பம் சார்ந்த செயலியினை வடிவமைக்கவும், தற்போதைய செயல்பாடுகளை அதிகரிக்கவும் இருக்கிறது.  

* பீஸ் ஆட்டோமோசன் (Peas Automation) நிறுவனம்:

பல்வேறு இடங்களுக்கு எடுத்து செல்லக்கூடிய உணவு தானியங்களை பதப்படுத்தும் இயந்திரக் கருவியினை ஐ.ஓ.டி தொழில்நுட்பத்தினை வடிவமைத்து வரும் பீஸ் ஆட்டோமோசன்  நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் பங்கு முதலீடாக வழங்கப்பட்டுள்ளது. இக்கருவியினை விற்பனைக்கு கொண்டுவரும் வகையில் செயல்பாடுகளை மேம்படுத்த இந்த முதலீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் வி.அருண்ராய் தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin , Tamil Nadu Scheduled Tribes Entrepreneurship Fund Scheme: Chief Minister M.K.Stalin issues investment orders to beneficiaries
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...