விரைவு ரயில் மோதி பெண் காவலர் பலி

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் மோதி, லஞ்ச ஒழிப்புத் துறை பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். திருமுல்லைவாயல் சுப்பிரமணி நகர் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீபிரியா (42). இவர், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில், தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், தாய் மற்றும் 3 சகோதரிகளுடன் ஸ்ரீபிரியா வசித்து வந்தார்.  பின்னர், 3 சகோதரிகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஸ்ரீபிரியா மட்டும் திருமணம் செய்யாமல் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாயார் இறந்ததால், இவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று காலை 8.48 மணிக்கு இவர், ஆவடி ரயில் நிலையத்தில் 4வது நடைமேடையில் இருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கு வந்த விரைவு ரயில் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார். தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: