வாகா: இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இருநாடுகளின் கொடிகளும் இறக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் 74வது ஆண்டு குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார். மாநிலங்களின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. முப்படைகள் மற்றும் கம்பீரமான பீரங்கிகள், டாங்கிகள், நவீன போர் விமானங்களின் அணிவகுப்புகளும் நடைபெற்றன. சுதந்திர தினம், குடியரசு தின நாட்களில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடியிறக்க நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். இதில் இந்தியாவின் பக்கத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தானின் பக்கத்தில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த ரேஞ்சர்ஸ்களும் பங்கேற்பார்கள்.