இசட் பிரிவு பாதுகாப்பு கொடுத்ததற்கு எதிர்ப்பு நான் மானபங்கப்படுத்தப்பட்டேன்: அண்ணாமலை மீது நடிகை காயத்ரி குற்றச்சாட்டு

சென்னை: பாஜ மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு, அவருக்கும் நடிகை காயத்ரிக்கும் மோதல் ஏற்பட்டது. காயத்ரியிடம் இருந்த கலை மற்றும் பண்பாட்டுத்துறையை பறித்தார். பின்னர் கட்சியில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து டிவிட்டரில் நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

என்னால் திரும்பக் கொண்டு வர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி, எனக்கு துரோகம் செய்த பாஜவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக் கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘ஆபாச பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு இசட் வகை பாதுகாப்பு.

ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி. நான் உங்களை அப்பாவாக பார்த்தேன். அரசியல் ஜோக்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு - மக்களின் பணத்தில் இருந்து. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான் என்று கூறியுள்ளார். நடிகை காயத்திரி ரகுராம் தான் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது பாஜவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டிவிட்டர் வெளியிட்ட சில நிமிடங்களில் அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டதாக பாஜ தமிழக தலைமை அறிவித்துள்ளது.

Related Stories: