சென்னை: ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவதும் மறுப்பதும் காவல்துறையினுடைய தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் கோவை காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வால்பாறை திராவிட தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எஸ்.கல்யாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தொழிலாளர்களின் கூலி உயர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதால் வால்பாறையிலிருந்து கோவை வரை ஊர்வலமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வால்பாறை காவல் நிலையத்தில் மனு கொடுத்தேன். மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை, அமல்படுத்தாதஅதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், தற்போது கோவையில் ஊர்வலம் நடத்த தகுந்த சூழல் இல்லை என விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பது காவல்துறையினுடைய தனிப்பட்ட அதிகாரம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.