ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய தனிநபர் மசோதா: மாநிலங்களவையில் திமுக எம்பி தாக்கல்

புதுடெல்லி: ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் நேற்று தாக்கல் செய்தார். மாநில ஆளுநர்களை தகுதி நீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யக்கோரும் தனிநபர் மசோதாவை திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அதில், ‘ஆளுநர்களை நியமிக்கும் முறையிலும், நீக்கும் முறையிலும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். தகுதியான நபர்கள் மட்டுமே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர் செயல்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டால் அவரை தகுதி நீக்கம் செய்ய வழிமுறை வகுக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அரசியல்சாசன பிரிவு 102, 155, 156 ஆகியவற்றில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

* தமிழக அங்கன்வாடிகள் தொடர்பான விவரங்கள் குறித்து மக்களவையில் திமுக எம்பி வேலுசாமி எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அளித்த பதிலில், ‘‘தமிழகத்தில் மொத்தம் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. இதில் நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் 800 அங்கன்வாடி மையங்களை தரம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

* பிரதான் மந்திரி மித்ரா திட்டத்தின் கீழ் விருதுநகர் ஜவுளி பூங்கா திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மாநிலங்களைவையில் நேற்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், ‘‘பிரதான் மந்திரி மித்ரா திட்டத்திற்காக நாடு முழுவதும் 11 மாநிலங்களில் இருந்து மொத்தம் 13 விண்ணப்பங்கள் ஒன்றிய அரசுக்கு வந்துள்ளது. இதில் எந்தெந்த மாநிலங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகிறதோ அவர்களுக்கான திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்’’ என தெரிவித்தார்.

* தென்சென்னை திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் நேற்று 3 தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்தார். அதில், ‘ஆதரவின்றி தவிக்கும் மூத்த குடிமக்கள், விதவைகள் போன்றோருக்கு வீட்டு வசதியை அளிக்க வகை செய்ய வேண்டும். குடிநீர், சுகாதாரம், திறன்வளர்ப்பு, நலத்திட்டங்களை உருவாக்குதல் போன்ற வளர்ச்சி சார்ந்த உட்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க வேண்டும். இணைய முடக்கத்தை தடுத்து இணைய பாதுகாப்புக்காக ஒரு அமைப்பை உருவாக்க வகை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 * மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை ஒன்றிய அரசு பெற்றுத் தர வேண்டும். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அரசுடன் இந்தியா உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்களவையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் புனர்வாழ்வு மற்றும் நிதி உதவி மசோதா, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (திருத்தம்) மசோதா, சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி (திருத்தம்) மசோதா 2022 ஆகியவை தொடர்பாக திமுக எம்பி கதிர் ஆனந்த் நேற்று தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். மேலும் அவர், ‘15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முன்மொழிகிறதா, அத்தகைய வாகனங்களுக்கு  வரி/அபராதம் ஏதேனும் விதிக்கப்படுகிறதா?’ என்பது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

Related Stories: