சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கலெக்டர்கள் அறிவிப்பு

சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பில், “கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Related Stories: