சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் பொழுது காற்றின் வேகத்தின் காரணமாக விழும், மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் மரங்களின் அருகாமையில் நிற்பதையோ அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின் கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று தேவையான உணவு குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். மழைநீர் கால்வாயில் மின் மோட்டார்களை கொண்டு மழைநீரை உடனடியாக வேளியேற்றவும் அறுவுறுத்தப்பட்டுள்ளது.