பெரம்பூர்: சென்னை எம்கேபி நகர் 17வது குறுக்கு தெரு பகுதியில் ஒரு வீட்டில் மாவா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே எஸ்ஐ ராஜேஷ் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தபோது, 2 கிலோ மாவா மற்றும் மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜர்தா 3 கிலோ, சீவல் 4 கிலோ மற்றும் மிக்ஸி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து வீட்டில் இருந்த ஆறுமுகம் (42), அவரது மனைவி கனக புஷ்பம் (36) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், வீட்டிலேயே மாவா தயாரித்து வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் விற்றது தெரியவந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.