திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்; நர்சிங் மாணவிக்கு பீர் பாட்டில் குத்து: பண்ருட்டி வாலிபர் கைது

அம்பத்தூர்: ஆவடி அருகே காதலிக்க மறுத்ததால்  நர்சிங் கல்லூரி மாணவியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட் டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி நர்சிங் படிப்பு படித்து வருகிறார். இவர், தனது தோழிக்கு போன் செய்தபோது தவறுதலாக பண்ருட்டி கருவேப்பிலை பாளையம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (23) என்பவருக்கு சென்று விட்டது. போனை எடுத்து பேசிய ஐயப்பன், ‘நீங்கள் யார்’ என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவி, ‘தவறுதலாக உங்களுக்கு போன் கால் வந்து விட்டது’ என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

ஆனால் அடுத்த சில நாட்களுக்க பின்னர் இருவரும் அடிக்கடி  செல்போனில் பேசி கொண்டனர். 6 மாதங்களாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தகவல்களை பரிமாறி கொண்டனர். போட்டோக்களையும் செல்போனில் அனுப்பியுள்ளனர். நாளடைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று மாணவியிடம் ஐயப்பன் கூறியுள்ளார். இதற்கு மாணவி சம்மதம் தெரிவிக்காமல், நான் படிக்கவேண்டும் என கூறியுள்ளார்.  இதனால் இருவர் இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னை பட்டாபிராம் வந்த ஐயப்பன், மாணவி கல்லூரிக்கு போவது, வருவதை கண்காணித்து வந்துள்ளார். மாணவி நர்சிங் கல்லூரி செல்வதற்காக தினமும் பட்டாபிராம் ரயிலில் வந்து அங்கிருந்து பட்டரைவாக்கம் செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று கல்லூரி செல்ல மாணவி பட்டாபிராம் ரயில்நிலையம் வந்து ரயில் மூலம் பட்டரைவாக்கம் வந்தார்.

அங்கு, ரயில் நிலையத்தில் காத்திருந்த ஐயப்பன், மாணவி வந்ததும் வழிமறித்து, தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும்படி கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், இருவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேசிக்கொண்டே இருவரும் ரோட்டுக்கு வந்தனர். வெங்கடாபுரம் அருகே வந்தபோது ஆத்திரமடைந்த ஐயப்பன், மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மாணவியின் கழுத்தில் சரமாரி குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து மாணவி கீழே விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த  அப்பகுதி மக்கள்,  ஐயப்பனை மடக்கி பிடித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மாணவியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் நேற்று மாலை புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரி கேன்டீனில் வேலை செய்து வருவதும், தன்னை திருமணம் செய்ய நர்சிங்  கல்லூரி மாணவி மறுத்ததால் ஆத்திரத்தில் பீர் பாட்டிலால் குத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட  ஐயப்பனை அம்பத்தூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  நர்சிங் கல்லூரி மாணவி பீர்பாட்டிலால் குத்தப்பட்ட சம்பவம் பட்டரைவாக்கம் பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: