செல்பி எடுக்க முயன்ற போது 150 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்த புதுமணப்பெண்: திருமணம் தள்ளிவைப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் 150 அடி உயர பாறைக்கு மேல் நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி பாறைக்குளத்தில் விழுந்த வாலிபர், இளம்பெண் மீட்கப்பட்டனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (25). துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் அருகே உள்ள பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சாந்த்ரா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று திருமணம் நடப்பதாக இருந்தது.

இந்தநிலையில் நேற்று 2 பேரும் அருகில் உள்ள ஒரு பாறைக்குளத்திற்கு போட்டோ எடுப்பதற்காக சென்றனர். கல் குவாரியான அந்தப் பகுதியில் 150 அடி உயரத்தில் பாறை உள்ளது. அங்குள்ள குளத்தில் 50 அடியில் தண்ணீரும் உள்ளது. அபாயகரமான பகுதி என்பதால் அந்த பகுதிக்கு அதிகமாக யாரும் செல்வது கிடையாது.

2 பேரும் பாறைக்கு மேல் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாந்த்ரா கால் தவறி 150 அடி உயரத்தில் இருந்து பாறைக் குளத்திற்குள் விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வினு கிருஷ்ணனும் அவரைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்தார்.

அதிர்ஷ்டவசமாக சாந்த்ராவின் உடை கையில் கிடைத்ததால் வினு கிருஷ்ணன் அவரை பிடித்து இழுத்து பாறையின் ஒரு பகுதிக்கு கொண்டு சென்றார். 2 பேரின் கூக்குரலை கேட்டதும் அந்த பகுதியினர் விரைந்து சென்றனர். மிகவும் சிரமப்பட்டு பாறையின் மேலிருந்து அவர்களுக்கு ஒரு கயிறை போட்டுக் கொடுத்தனர்.

அதன்படி கயிறை பிடித்தபடி 2 பேரும் பாறையின் அருகே ஒதுங்கி நின்றனர். இதுகுறித்து போலீஸ் மற்றும் தீயணைப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். கீழே விழுந்ததில் காயமடைந்த 2 பேரும் கொல்லத்திலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று நடைபெற இருந்த அவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

Related Stories: