கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் தனியார் பள்ளி வேன் சாலையோரம் நின்றுகொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற பள்ளிவேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், இடிபாடுகளில் சிக்கியிருந்த 5பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திலேயே ஜெபராஜ் ஐசக்(65) என்பவர் உயிரிழந்து இருப்பது தெரிந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பெண் ஒருவர் இறந்தார். மற்ற 3பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.