தமிழ்நாட்டில் பன்னாட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

சென்னை: வரும் காலங்களில் பன்னாட்டு  அளவிலான போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 44வது செயலாண்மைக் குழு கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 44வது செயலாண்மைக் குழு கூட்டம் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இக்குழுவின் உறுப்பினர்களான அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், பொன்.அசோக் சிகாமணி மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர். எம்.சுந்தர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட இடம் தேர்வு, உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்ற அரசின் திட்டப் பயன்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 44வது செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளை உலகம் வியக்கும் வண்ணம் நடத்தியுள்ள நிலையில் வருகின்ற காலங்களில் பன்னாட்டு அளவிலான போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும். வீரர்-வீராங்கனைகள் தங்களது திறமைகளையும், சாதனைகளையும் வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் பல்வேறு நிலைகளில் நடத்துகின்ற விளையாட்டு போட்டிகளை சிறப்பான முறையில் நடத்திட வேண்டும். தேசிய, பன்னாட்டு அளவிலான போட்டிகள் மற்றும் ஒலிம்பிக், பாராஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் மற்றும் வெற்றி பெறுகின்ற தமிழ்நாடு வீரர்-வீராங்கனைகளுக்கு உதவித்தொகைகள், ஊக்கத்தொகைகள் உடனுக்குடன் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

Related Stories: