சட்டமன்ற பொது கணக்குக் குழு கீழடி அகழாய்வு தளத்தில் ஆய்வு

திருப்புவனம்: சட்டமன்ற பொது கணக்குக் குழுவினர் கீழடி அகழாய்வு தளத்தை ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிந்துள்ளன. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களிலும் 20 குழிகள் தோண்டப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் கீழடியில் ரூ.11 கோடியே 3 லட்சம் செலவில் 10 கட்டிடங்களுடன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியக கட்டிட பணிகள் முடிவடைந்து பொருட்கள் காட்சிக்கு வைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனிடையே, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குக்  குழு தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ தலைமையில், உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் சிந்தனைச்செல்வன், மாரிமுத்து, பிரகாஷ், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் தேன்மொழி, துணைச்செயலாளர் ரேவதி உள்ளிட்டோர் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தனர். இக்குழுவினர் கீழடியில் ஆய்வு மேற்கொண்டனர். கீழடி அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டனர். தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா உள்ளிட்டோர் விளக்கமளித்தனர்.பின்னர் அருங்காட்சியக கட்டிட பணிகளை பார்வையிட்டனர்.

Related Stories: