புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பேசியதாவது: ஆர்.என். பிரசாத் தலைமையிலான வல்லுநர் குழு 10.3.1993 சமூக ரீதியாக முன்னேறிய நபர்களை தவிர்ப்பதற்காக கிரீமிலேயர் முறையை கண்டறிந்தது. ஓபிசி இடஒதுக்கீடுகளில் இருந்து கிரீமிலேயர் வகுப்பினரை விலக்குவதற்கான அறிக்கையினை வகைப்படுத்தி அக்குழு சமர்ப்பித்தது. இது செப்டம்பர் 8, 1993ல் ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கும் கிரீமிலேயரை விலக்குவதற்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடக்கத்தில், அதாவது 1993ம் ஆண்டில் வருமான வரம்பானது ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது உயர்த்தப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 2017ல் ₹6 லட்சத்திலிருந்து ₹8 லட்சமாக திருத்தப்பட்டது.