திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள வடகரை பகுதியைச் சேர்ந்தவர் சைனுல்லாப்தீன் (48). ஆன்மீக குரு என்று கூறி மலப்புரம், பாலக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று பிரார்த்தனை, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை ஆகியவற்றை செய்து வந்து உள்ளார்.
இந்தநிலையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பாலக்காடு அருகே உள்ள ஒற்றபாலம் பகுதியை சேர்ந்த ஒரு வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது வீட்டில் இருந்த 16 வயது சிறுமியை தனக்கு பணிவிடைகள் செய்ய வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஆன்மீக குருவின் கட்டளையை மீற முடியாது என்பதால் சிறுமியை அவரது பெற்றோர் வடகரையில் உள்ள சைனுல்பாப்தீனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வீட்டில் வைத்து சிறுமிக்கு தேனில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து உள்ளார்.இந்த சம்பவம் கடந்த 2002ம் ஆண்டு நடந்தது. பின்னர் அடிக்கடி சிறுமியை தனது வீட்டில் வைத்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். சைனுல்லாப்தீனின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து ஒன்றரை வருடங்களுக்கு பிறகு சிறுமி தனது வீட்டுக்கு சென்று விட்டார்.ஆனாலும் சைனுல்லாப்தீன், சிறுமியின் வீட்டுக்கு சென்றும் மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து வந்து உள்ளார். இந்தநிலையில் சில வருடங்களுக்குப் பிறகு சிறுமிக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகும் தன்னிடம் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மிரட்டி இளம்பெண்ணை சைனுல்லாப்தீன் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். இந்த விவரம் சமீபத்தில் இளம்பெண்ணின் கணவனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் இளம்பெண்ணை விவாகரத்து செய்துவிட்டார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன்னை பல வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த சைனுல்லாப்தீன் குறித்து இளம்பெண் கேரள முதல்வர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஒற்றப்பாலம் போலீசார் சைனுல்லாப்தீனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை ஒற்றப்பாலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.