டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா:2,241 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா முதல் அமர்வு பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவமணை கன்வென்ஷன் அரங்கில் நேற்று நடந்தது. இதில் மருத்துவம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, பிஎச்டி முடித்த 2241 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக நிறுவனர்-வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்திய மருந்தக கவுன்சில் தலைவர் மோண்டு எம்.பட்டேல், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி, விஜிபி குழுமம் தலைவர் வி.ஜி.சந்தோசம், லைக்கா மருத்துவ குழுமம் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

பட்டங்களை வழங்கி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: பெற்றோர்களின் தியாகத்தால்தான் பிள்ளைகள் பட்டம் பெற முடிகிறது. எனது வெற்றிக்கு காரணம் மூன்று ரகசியங்கள் என்று சொல்வேன். முதல் ரகசியம், கடுமையான உழைப்பு,  இரண்டாவது ரகசியம் கடுமையான உழைப்பு, மூன்றாவது ரகசியம் கடுமையான உழைப்பு. இந்தியாவில் இளம் வயது ஆளுநர் நான்தான். புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தை எப்படி கையாளுவார் என விமர்சனம் செய்தனர். அதனை கையாண்டு மேலும் புதுச்சேரி பொறுப்பு ஆளுநராகவும் நியமனம் செய்தார்கள். நான் மகப்பேறு மருத்துவர் என்பதால் ஒரு குழந்தை மட்டுமல்ல, இரண்டு குழந்தையையும் கையாளுவேன் என என்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பல்கலை நிறுவனர் வேந்தர் ஏ.சி.சண்முகம், பல்கலை தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார், செயலாளர் ரவிக்குமார், வேந்தர் வாசகம், துணைவேந்தர் கீதாலட்சுமி, முதன்மை கல்வியாளர் கோபாலகிருஷ்ணன், முகவர் டாக்டர் விஸ்வநாதன், இணை துணை வேந்தர் ஜெயச்சந்திரன், சட்ட இயக்குனர் கோதண்டன், பதிவாளர் பழனிவேலு, திரைப்பட இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், லைக்கா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரன், நடிகை குஷ்பு, நடிகர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: