மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சிக்கு 21ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி அழைப்பு

சென்னை: மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப் படிப்பு பயிற்சிக்கு, வரும் 21ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விதிகளின் படி, ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், இயக்குநர் (பொறுப்பு), தொ.நோ.ம.மனை எண்.187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600081ல் என்ற முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் வரும் 12ம்தேதி முதல் 19ம்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 21ம்தேதி மாலை 5 மணி. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: