சென்னை: சென்னை தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையில் இரவு நேரங்களில் ரகசியமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக தேனாம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் இரவு டாக்டர் தாமஸ் சாலை மற்றும் நாகாத்தம்மன் கோயில் பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஆட்டோவில் 2 பேர் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது, அதில் 90 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் ஆட்டோவை ஓட்டி வந்த தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த வினோத்குமார் (26) மற்றும் நவீன்(21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 போதை மாத்திரைகள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.