பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் வீட்டிலேயே மாவா தயாரித்து விற்பனை செய்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து 12 கிலோ மாவாவை போலீசார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி சஞ்சய் நகர் பகுதியில் வீட்டிலேயே மாவா தயாரித்து விற்கப்படுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்காருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் மதியம் எம்கேபி நகர் சப்-இன்ஸ்பெக்டர் நாதமுனி தலைமையிலான போலீசார் வியாசர்பாடி சஞ்சய் நகர் 2வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் சிறு சிறு பொட்டலங்களாக மாவா மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜர்தா சீவல் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அங்கிருந்து மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் 12 கிலோ பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டில் மாவா பொருட்களை தயார் செய்து விற்பனை செய்த கணேசன் (42) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். பிறகு கணேசன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.