புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் திடீர் தற்கொலை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (61). இவரது, சகோதரர் பாஸ்கர். இருவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களது சகோதரி ராஜேஸ்வரி (55). திருமணம் ஆகாத இவர், திருவள்ளூரில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி கடும் அவதிக்குள்ளாகி வந்தார். இதனால், அவரது சகோதரர் வசந்த், ராஜேஸ்வரியை சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு, அவரது வலது கன்னத்தில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து, ஒரு பல் பிடுங்கி, நாக்கின் ஒரு பகுதி சிறிதாக அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பேச முடியாமல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே, வசந்த் அவரது வீட்டிற்கு அழைத்து வந்து பார்த்துக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் ‘எனது சாவுக்கு நானே காரணம். யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு குளியல் அறையில் உள்ள இரும்பு பைப்பில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும், அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த வசந்த் மற்றும் அவரது தம்பி பாஸ்கர் ஆகியோர் குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில், சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜேஸ்வரியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: