தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு: நோயாளிகள் வெளியேற்றம்

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை 2வது மாடியில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை மருத்துவமனையின் 2வது மாடி முழுவதும் பரவியது. இதை கவனித்த மருத்துவமனை ஊழியர்கள், 2வது மாடியில் இருந்த உள்நோயாளிகளை உடனடியாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், மயிலாப்பூர், தேனாம்பேட்டை பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும், மருத்துவமனையில் மற்ற தளங்களுக்கும் தீ பரவாமல் தடுத்தனர். தீ விபத்தில் 2வது மாடியில் உள்ள கணினிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதமானது. நோயாளிகளை உடனே அப்புறப்படுத்தியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: