வேலைக்கு செல்லாமல் போதையில் வீட்டில் இருந்த மகனுக்கு சரமாரி வெட்டு: தந்தைக்கு போலீஸ் வலை

பெரம்பூர்: குடிபோதையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மகனை சரமாரியாக வெட்டிய தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொடுங்கையூர் எழில் நகர் ஏ பிளாக் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் விக்னேஷ் (23). இவர், கோயம்பேட்டில் உள்ள தனியார் டிராவல்ஸ் பார்சல் கம்பெனியில் லோடிங் மற்றும் அன்லோடிங் வேலை செய்து வருகிறார். கடந்த, சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் விக்னேஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை உதயகுமார் வீட்டிற்கு வந்து, ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டு மகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, 2 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரம் அடைந்த உதயகுமார் வீட்டிலிருந்து கத்தியை எடுத்து தனது மகன் விக்னேஷின் தலை மற்றும் 2 கைகளில் சரமாரியாக வெட்டினார். இதில் விக்னேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக, உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விக்னேஷை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள உதயகுமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: