சென்னை: மேற்கு மாம்பலத்தில் இளம்பெண்கள் குளியல் அறையில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்து இரவு நேரங்களில் ரசித்து வந்த தனியார் நிறுவன கணக்காளரை போலீசார் கைது செய்தனர். சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் உள்ள புஷ்பாவதி அம்மன் தெருவை பகுதியை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் குமரன் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் புஷ்பாவதி தெருவில் வசித்து வருகிறேன். நான் குளித்துக்கொண்டிருந்தபோது, அருகில் உள்ள குளியல் அறையின் வழியாக அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் என்னை செல்போனில் வீடியோ எடுத்தார். அதை நான் பார்த்து சத்தம் போடவே அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பிறகு இதுகுறித்து எனது கணவரிடம் கூறினேன். அவர் தனது நண்பர்கள் 2 பேருடன் ஸ்ரீராமை பிடித்து அவரது செல்போனை வாங்கி பார்த்த போது, அதில் நான் குளிப்பது மற்றும் என்னைபோல் பல பெண்கள் குளிப்பதை அவர் வீடியோ எடுத்து வைத்துள்ளார். எனவே, என்னை போன்ற பெண்கள் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்து ரசித்து வரும் ஸ்ரீராம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். புகாரின்படி குமரன் நகர் போலீசார் ஸ்ரீராம் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஸ்ரீராம் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்கள், குளியல் அறையில் குளிக்கும் போது, யாருக்கும் தெரியாமல் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார். அந்த வீடியோவை இரவு நேரங்களில் தனியாக ரசித்து பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும், இதுபோன்று ஸ்ரீராம் பல நாட்களாக செய்து வந்தது விசாரணையில் உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் ஸ்ரீராமிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். செல்போனில் இருந்த 10க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் குளியல் வீடியோக்களை போலீசார் அழித்தனர். போலீசார் ஸ்ரீராம் மீது 3க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.