புதுடெல்லி: தமிழகத்தில் சென்னை-வேலூர் மற்றும் சென்னை-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மிகவும் கால தாமதமாக நடைபெற்று வருகிறது. அதன் தற்போதைய நிலை என்ன, அது எப்போது முடிவடையும், அதற்கான காலக்கெடு என்ன என்று திமுக எம்.பி ராஜேஷ்குமார் மாநிலங்களவையில் நேற்று கேள்வியெழுப்பினார். இதையடுத்து அதற்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளிக்கையில், ‘‘சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையில் மூன்று தொகுப்புகளாக நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது.
இதில் மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை பிரிவு,(மதுரவாயல் முதல் பெரும்புதூர் வரை) ஆகிய சாலை பணியானது தற்போது 55சதவீதம் முடிவடைந்துள்ளதால் 13.02.2023க்குள் முடிவடையும், அதேப்போன்று பெரும்புதூர் முதல் கவரைப்பேட்டை பணி 31.03.2024 ஆண்டும், கரைப்பேட்டை முதல் வாலாஜாபேட்டை வரையிலானது 31.12.2023க்குள் முடிவடையும்.
கிழக்கு கடற்கரை சாலையில், சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையிலான சுமார் 52.90 கிமீ நீளமுள்ள பகுதி நான்கு வழிப் பாதையாக்கப்படுகிறது. இது தற்போது தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரையிலான தேசிய நெடுஞ்காலை மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணிகள் தாமதமின்றி நடக்கிறது’’ என தெரிவித்தார்.