ஆர்.கே.பேட்டை அருகே காரில் வந்த நகை வியாபாரிக்கு துப்பாக்கி மிரட்டல்: 2 மர்ம நபர்களுக்கு வலை

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே நேற்றிரவு நகை வியாபாரி வந்த காரின் பின்பக்க கண்ணாடியை துப்பாக்கியால் சுட்டு மிரட்டல் விடுத்த 2 மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த்குமார். இவர் பள்ளிப்பட்டு, அம்மையார்குப்பம் பகுதிகளில் நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும், இவர் ஒவ்வொரு செவ்வாய்கிழமைதோறும் சென்னை சென்று, தங்க நகைகள் வாங்கி வந்து, சக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது வழக்கம்.

 

இந்நிலையில், நேற்று காலை சென்னையில் தங்க நகைகள் வாங்க காரில் ஹேமந்த்குமார் டிரைவருடன் சென்றிருந்தார். பின்னர் அங்கு நகைகளை வாங்கிவிட்டு, இருவரும் இரவு 9 மணியளவில் திருத்தணி வழியாக காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இவர்களின் கார் திருத்தணி-ஆர்.கே.பேட்டை மாநில நெடுஞ்சாலை வழியே வேலன்கண்டிகை அருகே வந்தபோது, பின்தொடர்ந்து பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு, காரை நிறுத்தும்படி மிரட்டல் விடுத்தனர். துப்பாக்கி குண்டு பட்டதில், காரின் பின்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.

 

இதைத் தொடர்ந்து காரை வேகமாக செலுத்திய டிரைவர், ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டு இருவரும் காரில் சென்றனர். இந்த கார் அம்மையார்குப்பம் அருகே வந்தபோது, பைக்கை சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு கீழே இறங்கிய 2 மர்ம நபர்கள், காரில் இருந்த நகை வியாபாரி ஹேமந்த்குமாரிடம் துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்தனர்.

 

எனினும், சாலையின் குறுக்கே நின்றிருந்த பைக்மீது மோதாமல் காரை வேறுபக்கமாக டிரைவர் திருப்பி ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்துக்கு ஓட்டி வந்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் ராஜ்ஜிடம் நகை வியாபாரி ஹேமந்த்குமார் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை வியாபாரிக்கு துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்த 2 மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: