பூவை பறித்து தலை மீது வீசி விளையாடிய ஒற்றை யானை: சிசிடிவி காட்சி வைரல்

பெ.நா.பாளையம்: கோவை அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை அங்குள்ள வீட்டுக்குள் அழகுக்காக கட்டி தொங்கவிடப்பட்டிருந்த பூவை பறித்து தலைமீது வீசி விளையாடிய சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது. கோவை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் அருகே உள்ளது வைலட் கார்டன். இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்றிரவு குருடிமலை அடிவார பகுதியில் இருந்து 4 யானைகள் அப்பகுதிக்கு வந்தன. அருகில் இருந்த தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அங்கிருந்த வாழை கன்றுகளை சாப்பிட்டு சேதப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து வைலட் கார்டன் குடியிருப்புக்குள் புகுந்த 4 யானைகள் ஒவ்வொரு வீதியாக ஊர்வலம் செல்வது போல் வரிசையாக சென்றது. அதில் ஒரு யானை ஒரு வீட்டின் முன்பு பூட்டப்பட்டிருந்த கேட்டின் உள்ளே தும்பிக்கையை விட்டு தேடியது. அங்கு, அழகுக்காக கட்டி தொங்கவிடப்பட்டிருந்த பூ தொட்டியில் இருந்த பூவை பறித்து அதன் தலை மீது வீசிக்கொண்டு விளையாடியபடி சிறிதுநேரம் நின்று விட்டு அந்த வீட்டை விட்டு கடந்து சென்றது. இந்த காட்சி அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் புதிவாகியுள்ளது. இதன் பின்னர் யானைகள் யாரையும் தொந்தரவு செய்யாமல் கார்டனுக்குள் சிறிது நேரம் சுற்றி விட்டு அங்கிருந்து காட்டு பகுதிக்குள் சென்று விட்டன.

யானை எதேச்சையாக இதை செய்திருந்தாலும் வீட்டின் குடும்பத்தினர் அந்த வீடியோ பதிவை ‘இரவு நேரத்தில் எங்கள் வீட்டுக்கு வந்த பெண் ஒருத்தி (யானை), எங்கள் அனுமதி இல்லாமல் பூ பறித்து தலையில் வைத்து கொண்டாள்’ என்று நகைச்சுவையுடன் உறவினர்கள், நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அந்நிகழ்வை பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: