திருமணத்திற்காக ரூ.30 லட்சம் கடன் பெற்று மோசடி; போலி காசோலை கொடுத்த தாய், மகள் சிறையில் அடைப்பு

தாம்பரம்: தாம்பரம் அருகே திருமணத்திற்காக ரூ.30 லட்சம் கடன் பெற்று, போலி காசோலைகள் கொடுத்து மோசடி செய்த தாய், மகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாம்பரம் அடுத்த சேலையூர், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (50). இவரது மனைவி ரெஜிகுமார் (47), மகள் ஜூலி (25). கடந்த 2014ம் ஆண்டு உதயகுமார்  உயிரிழந்த நிலையில், ரெஜிகுமார் மற்றும் ஜூலி ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். ரெஜிகுமார் எல்ஐசி ஏஜென்ட் ஆக உள்ளார். ஜூலி சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்தாண்டு ரெஜிகுமார் தனது மகள் ஜூலிக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு அதே பகுதியை சேர்ந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா உள்பட ஏராளமானவரிடம் சுமார் ₹30 லட்சம் வரை கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

பின்னர், ஜூலியின் திருமணம் முடிந்தும் ரெஜிகுமார் கடனை திருப்பி கொடுக்காததால், அவரிடம் பணம் கொடுத்தவர்கள் திரும்ப தரும்படி கேட்டுள்ளனர். அப்போது, ரெஜிகுமார் கடன் வாங்கியவர்களிடம் அந்த தொகைக்கான காசோலைகளை வழங்கி உள்ளார். ஆனால், கொடுத்த காசோலைகளை கடன் கொடுத்தவர்கள் வங்கியில் செலுத்தியபோது, அது போலி என தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோர் ரெஜிகுமாரிடம் கேட்டுள்ளனர். அதற்கு, அவர் முறையாக பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் ரெஜிகுமாரின் மகள் ஜூலி திருமண புகைப்படத்தை செக் மோசடி கும்பல் என வீட்டின் சுவரில் சுவரொட்டியாக தயாரித்து ஒட்டியுள்ளனர்.

இதைக் கண்ட ரெஜிகுமார், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக கூறி மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோர் மீது புகார் அளித்தார். புகாரின்பேரில், சேலையூர் காவல் நிலைய போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோர் ரெஜிகுமாரிடம் பணம் கொடுத்து ஏமாந்த சிலர் நேற்று முன்தினம் மாலை கிழக்கு தாம்பரத்தில் மீன் வாங்குவதற்காக வந்த ரெஜிகுமாரை வழிமறித்து தங்களது கடன் தொகையை கேட்டுள்ளனர்.

அப்போது, இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், தகவலறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களை சமாதானம் செய்து, எதுவாக இருந்தாலும் காவல் நிலையம் வந்து பேசிக் கொள்ளுங்கள் எனக் கூறி அழைத்து சென்றனர். அங்கு, போலீசார் நடத்திய விசாரணையில், ரெஜிகுமார் மற்றும் அவரது மகள் ஜூலி ஆகியோர் திருமணத்திற்காக ஏராளமானவரிடம் சுமார் ₹30 லட்சம் வரை கடன் பெற்று போலி காசோலைகள் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, ரெஜிகுமார், அவரது மகள் ஜூலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த சேலையூர் காவல் நிலைய போலீசார் 2 பேரையும் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: