திருமலை: ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த பல் மருத்துவ கல்லூரி மாணவியை சாப்ட்வேர் ஊழியர் கழுத்தறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பமிடிமுக்காலா அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தபஸ்வி(21). இவர் விஜயவாடா மருத்துவ கல்லூரியில் பிடிஎஸ் படித்து வந்தார். அவரது பெற்றோர் வேலை நிமித்தமாக மும்பையில் உள்ளனர். அவர் அத்தையுடன் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில், சமூக வலைதளத்தின் மூலம் உங்குடுரு அடுத்த மணிகொண்டாவை சேர்ந்த சாப்ட்வேர் ஊழியரான ஞானேஷ்வர்(25) என்பவருடன் தபஸ்விக்கு நட்பு ஏற்பட்டது.
பின்னர், இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இடையே சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையால் தபஸ்வி உங்குடுரு போலீசில் ஞானேஸ்வர் மீது புகார் அளித்தார். காதலர்களை சமாதானம் செய்து வைக்க இருவரையும் தபஸ்வியின் தோழி ரூபி பெடகக்கனி அடுத்த தக்கெல்லபாடு கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து பேசினார். பின்னர் இருவரையும் தனியாக பேசி சமாதானம் அடையுமாறு கூறிவிட்டு ரூபி வெளியே வந்துள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் காதல் ஜோடிகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ‘நான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன்’ என தபஸ்வி கூறியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஞானேஷ்வர், ஏற்கனவே திட்டமிட்டு தன்னிடம் மறைத்து கொண்டு வந்த அறுவை சிகிச்சை செய்யும் பிளேடால் தபஸ்வி கழுத்து உட்பட பல இடங்களில் அறுத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு தோழி ரூபி மற்றும் பொதுமக்கள் அங்கு வந்தனர். அப்போது, கையை அறுத்து கொண்டு ஞானஸ்வேரும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அதற்குள் ஞானேஸ்வரை அப்பகுதி மக்கள் பிடித்து கயிறால் கட்டி வைத்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்த தபஸ்வியை மீட்டு குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறிது நேரத்தில் தபஸ்வி உயரிழந்தார். தக்கெல்லபாடு போலீசார் வழக்குப்பதிந்து ஞானேஸ்வரை கைது செய்தனர்.