திருவனந்தபுரம்:சபரிமலை வந்தால் அனைவரும் சாதாரண பக்தர்கள் தான் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கொச்சியிலிருந்து சபரிமலை சென்றுவர ரூ.48 ஆயிரம் கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை நடத்தப்படும் என்று ஒரு தனியார் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. நிலக்கல்லில் ஹெலிகாப்டரில் இறங்கிய பின்னர் காரில் பம்பைக்கும், பின்னர் அங்கிருந்து டோலியில் சன்னிதானத்திற்கும் சென்று விஐபி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அந்த நிறுவனம் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்ட விளம்பரத்தில் தெரிவித்திருந்தது. இந்த விவரம் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.