சென்னை: சென்னையில் ஆண்டுதோறும் சர்வ தேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல், இந்த ஆண்டுக்கான 20வது சர்வ தேச திரைப்பட விழா, வரும் 15ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இதில் 51 நாடுகளைச் சேர்ந்த 102 படங்கள் திரையிடப்படுகிறது. சென்னையிலுள்ள பிவிஆர் (சத்யம்), அண்ணா ஆகிய திரையரங்குகளில் இப்படங்கள் திரையிடப்படுகிறது. இந்த விழாவில் தமிழ்ப் படங்களின் போட்டி பிரிவுக்கு ‘ஆதார்’, ‘பிகினிங்’, ‘பபூன்’, ‘கார்கி’, ‘கோட்’, ‘இறுதி பக் கம்’, ‘இரவின் நிழல்’, ‘கசடதபற’, ‘மாமனிதன்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘ஓ2’, ‘யுத்த காண்டம்’ ஆகிய 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பொது பிரிவில் ‘கடைசி விவசாயி’, ‘மாலை நேர மல்லிப்பூ’, ‘போத்தனூர் தபால் நிலை யம்’ ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது. இந்நிகழ்ச்சியை தமிழக அரசுடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் என்ற அமைப்பு நடத்துகிறது. இதன் தொடக்க விழா வரும் 15ம் தேதி சத்யம் திரையரங்கில் நடக்கிறது. தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்து பேசுகிறார். விழா ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் கூறுகையில், ‘இந்த விழாவுக்கு தமிழக அரசு நிதி உதவியை எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு தமிழ்ப் படங்களுக்கு வழங்கும் விருது எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியுள்ளோம். சிறு இடைவெளிக்குப் பிறகு தரமணி திரைப்பட கல்லூரி மாணவர்களின் குறும்படங்கள் திரையிடப்பட்டு, அவற்றுக்கும் பரிசு வழங்குகிறோம்’ என்றார்.