சேத்தியாத்தோப்பு: என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி, என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் நிலத்தை எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் நிலம் அளவீடு செய்யும் பணிக்காக நேற்று 2வது நாளாக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கிராமத்துக்குள் நுழைந்தனர்.