ரூ.406 கோடியில் கட்டிய 4,644 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் 4,644 குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு வீடு மற்றும் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோட்டில் 1176 குடியிருப்புகள், கோயம்புத்தூர் 1120 வீடுகள், மதுரையில் 912 குடியிருப்புகள், புதுக்கோட்டை 384 வீடுகள், திருப்பூர் 380 வீடுகள், கரூர் 288 வீடுகள், கடலூர் 240 குடியிருப்புகள், சேலம் 144 குடியிருப்புகள் என ரூ.406 கோடியில் 4,644 குடியிருப்புகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையடுத்து குடியிருப்புகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில்  நடைபெறுகிறது.

மேலும் 4,500 வீடு ஒதுக்கீட்டு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.237 கோடியில் 11,300 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும், 350 பயனாளிகளுக்கு உரிமை ஆவணங்களையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழங்குகிறார். இந்நிகழ்ச்சி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பசரன் முன்னிலையில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் அபூர்வா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 

Related Stories: