சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் நேரில் சந்தித்து நன்றி கூறினர். வருவாய்த்துறை மூலம் உதவித்தொகை பெரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அதனை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.
இதற்கான அறிவிப்பை உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நேற்று முன்தினம் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 மாற்று திறனாளிகள் பயன்பெற உள்ளனர். ஜனவரி 1ம் தேதி முதல் அமலாகவுள்ள இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.