பண்ருட்டி அருகே பரபரப்பு உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் ரயில் விபத்து தவிர்ப்பு-பெண்ணுக்கு போலீசார் பாராட்டு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து உரிய நேரத்தில் தகவல் கொடுத்த பெண்ணால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கடலூர்- விழுப்புரம் வழியாக நாள்தோறும் ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராமம் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்த மஞ்சு (22) என்ற பெண் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே இதுகுறித்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், கடலூர் துறைமுகம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது, ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது உறுதியானது. இதையடுத்து, அவ்வழியே அதிகாலை 6.30 மணிக்கு செல்லும் விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் ரயில் கடலூரில் நிறுத்தப்பட்டது.  ரயில்வே பணியாளர்கள் உரிய நேரத்தில் வந்து, விரிசலான தண்டவாளத்தை சீரமைத்தனர்.

இதனிடையே தகவல் உரிய நேரத்தில் கிடைத்ததன் பேரில் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து கடலூர் துறைமுகம் ரயில்வே போலீசார் தகவல் அளித்த அப்பெண்ணை நேரில் சந்தித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து, கடலூரில் இருந்து பயணிகள் ரயில் அரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.  ரயில் தண்டவாளத்தில் விரிசல் எவ்வாறு ஏற்பட்டது. ஏதாவது சதியாக இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: