சென்னை: சன் பார்மா நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.10.58 கோடி அபராதத்தை வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து சன் பார்மா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையொட்டி, இயங்கி வரும் சன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனம், ஆலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சன் பார்மா மருந்து ஆலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறி மீனவர் நலச்சங்கத்தின் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 1994ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது சட்டவிரோதம் என கூறி சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், ஆலை செயல்பட்டால் உண்டான சேதம் குறித்து உரிய ஆய்வு செய்து முழுமையான இழப்பீட்டை சன் பார்மாவிடம் இருந்து பெற வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், அந்த தொகையை வைத்து பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்க செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என அரசுக்கும் உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, விரிவாக்க பணியால் நிலத்தடிநீர் பாதிப்படையவில்லை; எனவே, அபராதம், ஆலையை ஆய்வு செய்ய தடை கோரி சன் பார்மா நிறுவனம் ஐகோர்ட்டில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சன் பார்மா நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.10.58 கோடி அபராதத்தை வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சன் பார்மா தொடர்ந்த வழக்கு குறித்து பதிலளிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டு 4 வாரத்துக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.