தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’: நாட்டுப்புற கலைஞர்களின் பிரமாண்ட கலைநிகழ்ச்சி

சென்னை: தமிழக அரசின் கலை  பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் நாட்டுப்புற கலைஞர்களின் பிரமாண்ட கலை விழாக்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து, கலை பண்பாட்டு துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-23ம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானிய கோரிக்கையின்போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் பிரமாண்ட கலைவிழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

அதன்படி, நாட்டுப்புற கலை வடிவங்களை பொதுமக்களிடையேயும், உலக தமிழர்களிடையேயும் கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புற கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப்புற கலைக்கு  மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புற கலைகள் இடம்பெறும் வகையில் பிரமாண்ட கலைவிழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் பங்குபெற விரும்பும் கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு அல்லது  பென் டிரைவ்-ல் பதிவு செய்து, கலை பண்பாட்டு துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு தங்கள் குழுவின் முழு விவரங்களோடு (பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்பட) பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறவுள்ள ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். அதன்படி,

1. தங்கள் குழுவின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை பதிவு செய்து வருகிற 13ம் தேதிக்குள் கலை பண்பாட்டு துறையின் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  

2. ஒரு குழுவில் இடம்பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்க கூடாது.

3. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விவரம்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த குழுவினர், மண்டல உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம் சதாவரம், கோட்டை காவல் (கிராமம்), சின்ன காஞ்சிபுரம், ஓரிக்கை (அஞ்சல்), காஞ்சிபுரம் - 631502. தொலைபேசி: 044 - 27269148. மேலும், தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுகல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் நம்ம ஊரு திருவிழா நடைபெறகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: