தனிநபர் மின்னணு சாதன பறிமுதல் சிபிஐ நடைமுறையை புதுப்பிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புதுடெல்லி: தனிநபர் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யும் நடைமுறையில் சிபிஐயின் வழிகாட்டு நெறிமுறைகளை காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தனிநபரின் மின்னணு சாதனைங்களை பறிமுதல் செய்தல், ஆய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பாக சிபிஐக்கு வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி கல்வியாளர்கள் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த மாதம் சிபிஐ தரப்பில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஓகா ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘உலகம் முழுவதும் தனியுரிமைப் பிரச்னையைத் தொடர்ந்து விசாரணை அமைப்புகளின் கையேடுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘உலகமே மாறும் போது, சிபிஐயும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். தனிநபர் மின்னணு சாதனங்களை பறிமுதல், ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை காலத்திற்கேற்ப புதுப்பிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம்’’ என உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: