திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்றும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அதன்படி இன்று 90 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து உள்ளனர். சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 65 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
ஆனால் இன்று திங்கட்கிழமையும் சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து உள்ளனர். அதன்படி இன்று 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. காலை 10 மணிக்குள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் வரிசை 2 கிமீ வரை காணப்பட்டது. இதனால் இன்று பக்தர்கள் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.